மெட்ரோ ரயிலை விடுங்க பாஸ்.. பறக்கும் ரயிலின் பரிதாபத்தைப் பாருங்க!
சென்னை: எல்ஐசி பில்டிங், மெரீனா பீச், அண்ணா சமாதி, சென்ட்ரல் ஸ்டேஷன், கூவம்.. இதெல்லாம்தான் ஒரு காலத்தில் சென்னையின் அடையாளங்கள். இன்று எல்லாம் மாறிப் போய் விட்டது.. பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என ஒயிலாக மாறி விட்டது சென்னை.
சென்னை மக்களின் லேட்டஸ்ட் திருவிழா மெட்ரோ ரயில்தான். அதுவும் சுரங்கப் பாதையில் அறிமுகமாகியுள்ள ரயில் சேவையை அனுபவிக்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதில் ஏகப்பட்ட ஓட்டைகள். இருப்பினும் மக்களின் சுற்றுலா பொழுது போக்காக மாறியிருக்கிறது மெட்ரோ ரயிலும், ரயில் நிலையங்களும்.
ஆனால் மெட்ரோ ரயிலுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஆர்டிஎஸ் எனப்படும் பறக்கும் ரயில் இன்று மிகப் பரிதாப நிலையில் உள்ளது. அதை வசதியாக எல்லோரும் மறந்து விட்டனர்.
3 விதமான ரயில்கள்
சென்னை மாநகரில் மொத்தம் 3 விதமான ரயில் சேவை உள்ளது. ஒன்று இஎம்யூ (EMU)எனப்படும் வழக்கமான மின்சார ரயில்கள். அடுத்தது MRTS எனப்படும் பறக்கும் ரயில். 3வது லேட்டஸ்டாக இணைந்த மெட்ரோ ரயில்.
நெரிசல் குறையல
இத்தனை ரயில் வசதிகள் வந்தும் கூட சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை என்ற கவலை ஒரு பக்கம் இரு்நதாலும் கூட, புதிய வசதி வந்ததும், பழையதை மறக்கும் கெட்ட பழக்கம்தான் பெரும் துயரமாக உள்ளது.
புறக்கணிக்கப்பட்ட மாடி ரயில்
மின்சார ரயில்களில் பல குறைபாடுகள் தொடர் கதையாகவே உள்ளன. இந்த வரிசையில் தற்போது மாடி ரயில் எனப்படும் பறக்கும் ரயில்களும் இணைந்துள்ளன. பறக்கும் ரயில்களில் பயணிப்போர் பல குறைகளை அடுக்குகின்றனர்.
பராமரிப்பு போச்சு
முன்பு போல இந்த ரயில் நிலையங்களும், ரயில்களும் பராமரிக்கப்படுவதில்லை. ரயில் நிலையங்களில் சுத்தம் குறைந்து விட்டது. பல ரயில் நிலையங்களில் விளக்குகள் சரிவர எரிவதில்லை.
வீணாகக் கிடக்கும் எஸ்கலேட்டர்கள்
இந்தப் படத்தில் நாம் பார்ப்பது சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டர். இது புத்தம் புதிதாக வாங்கப்பட்டது. ஆனால் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
எதற்காக வாங்கினர்
பயணிகள் வசதிக்காகவே இந்த எஸ்கலேட்டர்கள். ஆனால் அதை வாங்கி அப்படியே தூசு படிய தூக்கிப் போட்டிருப்பது ஏன் என்று யாருக்குமே புரியவில்லை. வீணாகக் கிடக்கும் இந்த எஸ்கலேட்டரைப் பார்த்தபடிதான் கடக்கிறார்கள் பயணிகள்.
மக்கள் பணம்தானே
எல்லாம் மக்களின் பணம்தான். அதனால்தான் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை. மின்சார ரயில்களுக்கு அடுத்து மக்கள் அதிகம் பயன்படுத்துவது இந்த மாடி ரயில்களைத்தான். மெட்ரோ ரயிலை விட இதில் கூட்டம் அதிகம், பயன்பாடு அதிகம், கட்டணமும் குறைவு. ஆனால் அதிகாரிகள் இதைப் புறக்கணித்து வருவதுதான் ஆச்சரியம் தருகிறது.
புதுசா ஒன்று வந்ததும் பழையதை மறப்பது தப்பாச்சேப்பா.. சரி பண்ணுங்க!