ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
மருத்துவ சீட் மோசடி வழக்கில் கைதான வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் உத்தரவாத தொகை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சென்னை: மருத்துவ சீட் மோசடி வழக்கில் கைதான வேந்தர் மூவின் மதனுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 10 கோடி ரூபாய் உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் மதன் கடந்த நவம்பர் மாதம் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். மதன் கடந்த மே மாதம் கங்கையில் ஜலசமாதி அடையபோவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார்.
மதன் மற்றும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவன உரிமையாளர் பச்சமுத்துவிற்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானதா கூறப்பட்டது. இதன் அடிப்படையில் பச்சமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
பச்சமுத்துவின் தகவலின் அடிப்படையில் மதனை உடனடியாக கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசார் மதனை தீவிரமாக தேடி வந்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதன் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் கடந்த மே மாதம் திருப்பூரில் பங்களா ஒன்றில் பாதாள அறையில் பதுங்கியிருந்த மதனை கைதது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில் மதனின் ஜாமீன் மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை பிணை வழங்கியது.
மேலும் 10 கோடி ரூபாய் உத்தரவாத தொகை செலுத்த வேண்டும் என்றும் செங்கல்பட்டில் தங்கிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மதன் தரப்பு முடிவு செய்துள்ளது.