நாற்று நடுவது எப்படி.. பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஒரு கலகல நிகழ்ச்சி!
சென்னை: சென்னையில் பள்ளிக் குழந்தைகளுக்கு மறந்து போன நமது பாரம்பரியத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ. பள்ளியில் இந்த விழா நடந்தது. இதில் பள்ளிப் பிள்ளைகளுக்கு நமது பாரம்பரிய நிகழ்ச்சிகளும், பாரம்பரிய நிகழ்வுகளையும் நினைவூட்டும் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
கலை நிகழ்ச்சி போல நடத்தப்பட்ட இதில் கிராமத்து வாழ்க்கையை மாணவ, மாணவியர் நம் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
வயலில் நாற்று நடுவது எப்படி, களை எடுப்பது எப்படி, பானை செய்வது எப்படி, பால் கறப்பது எப்படி, மிளகாயைக் காயப் போடுவது எப்படி என பட்டணத்து குழந்தைகள் கற்றுக் கொள்ளவே இல்லாத அல்லது பரிச்சயமே இல்லாத பல விஷயங்களை இதில் கற்றுக் கொடுத்தனர்.
கிராமத்து ஆண், பெண் வேடம் தரித்த மாணவ, மாணவியர் இவற்றை தாங்களே செய்து பார்த்து மகிழ்ந்தனர், அதிசயித்தனர்.
ஒரு குயவர் பானை செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தார். அதை பள்ளிப் பிள்ளைகளும் செய்து பார்த்து அகமகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக பள்ளி வளாகமே ஒரு கிராமமாக, வயலாக, கிராமத்து திடலாக மாறிக் காட்சி அளித்தது காண்போரைக் கவர்ந்தது. பள்ளிக் குழந்தைகளுக்கும் இது வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.