வழியெல்லாம் குழிகள்.. சுற்றி நிற்கும் மழை நீர், கழிவுகள்.. பாவம் பள்ளிப் பிள்ளைகள்!
Recommended Video
சென்னை: சென்னையில் மழைக்காலம் வந்து விட்டால் மக்கள் படும் பாடு, துயரம் இருக்கிறதே.. அதை விட இந்த பள்ளிப் பிள்ளைகள்தான் மிகப் பெரும் துயருக்குள்ளாகிறார்கள்.
சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று கூறி விட்டார் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன். இதற்கு பதிலாக சென்னையில் வழக்கம் போல் கழிவுநீர் சூழ்ந்து பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பு செய்திருக்கலாம். காரணம் சிறு மழைக்கே இங்கு தண்ணீர் தேங்கி பெரும் துயரத்தைக் கொடுத்து விடுகிறது.
மழைக்காலங்களில் குறைந்தபட்சம் பள்ளிகளைச் சுற்றியுள்ள இடங்களிலாவது மழை நீரோ அல்லது சாக்கடை, கழிவு நீரோ தேங்காமல் பார்த்துக் கொள்ளும் வசதியை நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற மிகச் சாதாரண எதிர்பார்ப்புதான் மக்களிடம் உள்ளது.
குண்டு குழி சாலைகள்
சரி விடாமல் மழை பெய்கிறதே. லீவு விடப்படும் என்று எதிர்பார்த்திருந்த அனைத்து பெற்றோரும் இன்று காலை லீவு இல்லை என்ற கலெக்டரின் அறிவிப்பை உற்று நோக்கி உழன்று போயினர் மனதளவில். "ஆழி சூழ் உலகு" என்ற வார்த்தையை கேட்டிருப்போம். ஆனால், சாக்கடைநீர் சூழ்ந்த பள்ளிகளையும் , தெருக்களையும் மழைநேரத்தில் பார்க்கும் பொழுது, இந்த அரசு செயல்படுகிறதா? என்ற சிந்தனை மேலோங்குகிறது.
அவசர கதியில்தான் எல்லாமே
ஏதாவது உயிர்கள் பலி வாங்கப்பட்டால்தான், அரசு அவசரகதியில் நடவடிக்கை எடுக்கிறது. பாரதி போல் நாங்கள் காணி நிலம் கூட கேட்கவில்லை. சிறுசிறு பறவைகள் கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பது போல அடுக்குமாடி குடியிருப்பில் அவதிப்பட்டு கொண்டிருக்கும் அன்னையின் மனங்களில் ஆயிரம் கவலைகள்.
சந்திக்கும் அவலங்கள் ஆயிரம்
இதையெல்லாம் மீறி, எங்கள் சந்ததியினருக்கு கல்வியின் பெருமையை எடுத்துக்கூறி கற்க அனுப்பினால், நாங்கள் சந்திக்கும் அவலங்கள் ஆயிரம். போகும் வழிகளில் நெடுஞ்சாலைகளைத் தவிர குறுஞ்சாலைகள் அனைத்தும் குண்டும் குழிகளாக காட்சி அளிக்கின்றன. வெயில் காலங்களில் நாம் பார்த்துக் கவனித்துப் போக முடியும். ஆனால் இந்த மழைக்காலங்களில்?
எந்தக் குழியில் விழப் போறோமோ
ஐயகோ !! என்று அழுது புலம்புகிறது அனைவரது மனதும். எந்த குழியில் விழுந்தாலும், பார்க்க நாதியில்லை. தற்செயலாக, யாரேனும் புகைப்படம் எடுத்து ஊடகத்தின் பார்வைக்கு அனுப்பினாலொழிய, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மக்களைக் காப்பாற்ற யாருக்கும் நேரமும் இல்லை.
இது அன்பு மழையோ!
"அன்பு மழை" பொழிகிறது என்று நினைத்து விட்டார்கள் போல. அதனால்தான் விடுமுறை விடவில்லை போலும். தமிழகத்தில் இன்று "அன்பு"தான் அல்லோகல்லப்படுகிறது. இனியேனும் பிள்ளைகளின் நிலையை யோசித்து, பள்ளிகளுகக்கு விடுமுறையை அளியுங்கள் கலெக்டர் சார். அரசாங்கம் அன்புடன் மக்களை அணுகாதா? என்ற ஏக்கம் மக்கள் மனதில். முடிந்தால் தீர்த்து வையங்குள்.
- தனிஷ்ஸ்ரீ, சென்னை