தொடர் மழையின் எதிரொலி - கருப்பு நிறமாக மாறிய கடல் நீர்... மீன்கள் இறக்கும் அபாயம் !
சென்னை:தொடர் மழையின் காரணமாக சென்னை மெரினா கடலில் கழிவுநீர் கலந்துள்ளதால் கடல் நீர் கருப்பாக மாறியுள்ளது. இதனால் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ,சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து. இதன் காரணமாக கூவம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கூவம் ஆற்றில் தேங்கியிருந்த கழிவுகளும், பிளாஸ்டிக் கழிவு பொருட்களும் கடலில் கலந்தது. இதையடுத்து மெரினா கடற்கரை பகுதி கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் கழிவுப் பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரை ஓரப் பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் நீரின் அடர்த்தி அதிக அளவில் உள்ளது எனவே கடலில் இருந்து கரை திரும்பும் படகுகள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கனமழையில் அடித்து வரப்பட்ட கழிவுகள் அனைத்தும் மெரினா கடலில் கலந்துள்ளதால் மீன் இனப்பெருக்கம் அதிக அளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.