எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம்.. பாதிப்பில்லாமல் அரசே இடித்து தள்ளும்.. உதயகுமார் உறுதி
இரண்டு நாட்களாக பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் அரசு சார்பில் இடித்து தகர்க்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: இரண்டாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை பக்கத்து கடைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரசே இடித்து தள்ளும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.
இரண்டாவது நாளாக இன்றும் தீ கொழுந்துவிட்டு கட்டடம் எரிந்த நிலையில், தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளது. இதனை ஆய்வு செய்த பின்னர் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்டுக்குள் தீ
நேற்று இரவு முழுவதும் கட்டடம் எரிந்து கொண்டே இருந்ததில் கட்டடத்தின் நடு பகுதி முற்றுலுமாக இடிந்து விழுந்துவிட்டது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
தீ கங்குகள்
ஆனாலும், கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் தீ கங்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அவையும் முற்றிலும் அணைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசே இடிக்கும்
தீ முற்றிலும் அணைந்த பின்னர், இந்தக் கட்டடத்தை அரசே இடித்துத் தள்ளும். பக்கத்து கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் கட்டடம் இடிக்கப்படும்.
ஆய்வுக்குழு
கட்டடம் இடிக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் தொழில் நுட்ப வல்லுநுர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வை முடித்த பின்னர், எந்த விதத்தில் கட்டடத்தை இடிப்பது என்று முடிவெடுக்கப்படும்.
மீட்புக் குழுவினருக்கு நன்றி
இரண்டு நாட்களும் உணவு, நீர் என எதையும் உட்கொள்ளாமல் மீட்புக் குழுவினர் பணியாற்றினார்கள். உயிரைப் பணயம் வைத்து போராடிய அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.