திகு திகுவென எரியும் சென்னை சில்க்ஸ்.. தி.நகர் கடைகள் அடைப்பால்.. ஒரே நாளில் 50 கோடி நஷ்டம்
சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்தால் தி. நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விர்த்தகச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தியாகராயர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.
ஆனாலும் தீ அணைந்தபாடில்லை. தீ அடுத்தடுத்த கடைகளுக்கு பரவிவிடக் கூடாது என்பதற்காகவும் அச்சத்தின் காரணமாகவும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
50 கோடி நஷ்டம்
நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் தியாகராயர் நகரில் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் நஷ்டம் அதிகம் ஏற்படும் என்ற அச்சத்தில் வர்த்தர்கள் உள்ளனர்.
போலீசார் மறு உத்தரவு
இதுகுறித்து தியாகராயர் நகர் வர்த்தக சங்கத்தின் செயலாளர் சாரதி கூறும் போது, யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. போலீசாரின் மறு உத்தரவிற்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சாலையோர கடைகள்
பெரிய பெரிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்ட நஷ்டத்தைப் போன்றே, சாலையோரங்களில் கடை போடும் சிறு வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தி விபத்து தி.நகரின் வர்த்தகத்தை முற்றிலும் முடக்கியுள்ளது.
எதிர்ப்பார்ப்பு
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ நேற்று அணைந்துவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், இன்றுக்குள் தீ அணைந்துவிடும் என்ற நம்பிக்கையில் அனைவரும் உள்ளனர்.