சென்னை சில்க்ஸ்சில் இருந்து குபு குபுவென கரும் புகை.. அச்சத்தால் வெளியேறும் தி.நகர் வாசிகள்
இரண்டு நாட்களாக பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து வெளி வரும் கரும் புகையால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் வெளியேறி வருகின்றனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இரண்டாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.
ஆனாலும் தீ அணைந்தபாடில்லை. கடையின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. கடையின் சுவர்களுக்கு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உள்அலங்காரங்கள் என அனைத்தும் உருகின.
கரும்புகை
கட்டடத்தில் இருந்து இரண்டு நாட்களாய் கரும் புகை வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்துள்ளது.
சரிந்து விழுந்த கட்டடம்
புகையை உறிஞ்சும் கருவியை பயன்படுத்தியும் எந்தப் பயனும் இல்லை. கட்டடத்தில் ஏற்பட்ட தீயால் 7வது மாடியிலிருந்து 2வது மாடி வரை இடிந்து விழுந்தன.
எச்சரிக்கை
இதனால் தி. நகர் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. குபு குபுவென வெளியேறும் புகையில் மூச்சு திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுத்தினர்.
வெளியேறும் அப்பார்ட்மெண்ட் வாசிகள்
இதனால் அச்சமுற்ற சென்னை சில்க்ஸ் அருகில் வசிக்கும் அப்பார்மெண்ட் வாசிகள் தியாகராயர் பகுதியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். கரும் புகை பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள உறவினர் வீடுகளில் அவர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.