சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்!
தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை: தீ விபத்தில் எரிந்து நாசமான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஜா கட்டர் எனும் எந்திரத்தை பயன்படுத்தி கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குகளை கொண்ட அந்தக் கட்டடம் எலும்புக்கூடானது. கட்டடத்தின் பெரும்பாலன பகுதிகள் உறுதித் தன்மையை இழந்து இடிந்து விழுந்தது.
இதையடுத்து அந்தக் கட்டடத்தை இடிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முற்றிலும் உறுதியிழந்து நின்ற அந்தக்கட்டடத்தை இனியும் விட்டு வைப்பது ஆபத்து எனக்கூறப்பட்டதால் அதனை இடிக்க முடிவு செய்தனர்.
இடிக்கும் பணி தொடக்கம்
இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இரண்டு ராட்சத எந்திரங்கள் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஜா கட்டர் எந்திரம்
ஜா கட்டர் எந்திரத்தை பயன்படுத்தி 7 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த கட்டட இடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
3 நாட்களுக்குள்
7 அடுக்குகளை கொண்ட இந்த பிரமாண்ட கட்டடம் மேல் இருந்து கீழாக இடிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்குள் இந்தக் கட்டடம் இடித்து தரை மட்டமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகில் வரவேண்டாம்
கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெறுவதால் யாரும் அருகில் வரவேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. கட்டடத்தை முழுவதுமாக இடித்து அகற்றும் வரை பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.