கட்டட இடிபாட்டில் சிக்கி பலியான தொழிலாளிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: சென்னை சில்க்ஸ்
சென்னை: கட்டடம் இடிப்பின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி சரத்குமாரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது சென்னை சில்க்ஸ் நிர்வாகம்.
சென்னை தி நகரில் செயல்பட்டு வந்த தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31-ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் இக்கடையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்க 3 நாட்களாக போராடினர். 60 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டன. மேலும் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
எனினும் மீண்டும் மீண்டும் அக்கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அணைக்கு்ம பணிகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது. இதனிடையே கட்டடத்தின் 4 மாடிகளும், முகப்பு பகுதிகளும் இடிந்து விழுந்தது. இதனால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் தொடங்கின. ராட்சத இயந்திரமான ஜா கட்டர் வரவழைக்கப்பட்டு, கட்டடத்தை இடிக்கும் பணிகள் 9ஆவது நாளாக இன்று நடைபெற்றது. இந்த நிலையில், பிற்பகல் 3.45 மணியளவில், கட்டட இடிப்பு பணியின்போது, இடிபாடுகள் சரிந்து ஜா கட்டர் இயந்திரத்தின் மீது திடீரென விழுந்தது.
இந்த விபத்தில், ஜா கட்டர் மெஷின் ஆப்ரேட்டர் ஊத்தங்கரையைச் சேர்ந்த தொழிலாளி சரத்குமார்(21) உயிரிழந்தார். இந்நிலையில் பலியான தொழிலாளி சரத்குமாரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது சென்னை சில்க்ஸ் நிர்வாகம்.
முன்னதாக கட்டடத்தில் தீ எரிந்துகொண்டிருந்த போது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மே மாதச் சம்பளத்தைச் சென்னை சில்க்ஸ் நிறுவனம் கடந்த 1 ஆம் தேதி வழங்கியது. மேலும், ஊழியர்கள் அனைவரும் சென்னை சில்க்ஸின் மற்ற கிளைகளில் பணியாற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுத்தது அந்நிறுவனம்.