தீ விபத்து: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 4 தளங்கள் திடீரென இடிந்தது! அடியோடு விழும் அபாயம்!!
சுமார் 23 மணிநேரமாக எரிந்து வரும் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் வலது புறம் இடிந்து விழுந்தது.
சென்னை: தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் துணிக்கடையின் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் கட்டிடத்தின் 7வது தளத்தில் இருந்து 4வது தளம் வரை இடிந்து நொறுங்கியது.
சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் 24 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கட்டிடத்தின் 7வது தளத்தில் இருந்து 4வது தளம் வரை அதிகாலை 3.20 மணிக்கு திடீரென இடிந்து நொறுங்கியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 7வது தளத்தில் இருந்த தகர ஷெட்டும் இடிந்து விழுந்தது. பயங்கர சத்தத்துடன் கட்டிடம் வலது புறத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கட்டிடம் இடிந்து விழத் தொடங்கியதால் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் வெளியேற்றப்பட்டன. இருப்பினும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் அப்பகுதியில் பொதுமக்களை அகற்றி வருகின்றனர். சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவே கூறப்படுகிறது.
நுரைகலவை பீய்ச்சி அடிக்கும் எந்திரத்தில் தற்காலிகமாக பழுது ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடம் முழுவதும் இடியும் சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளபட்ட பின்னர் தீயை அணைக்கும் பணிகள் தொடங்கும் என தீயணைப்புத் துறை அதிகாரி சாகுல் ஹமிது தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிவதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை சில்க்ஸ் பகுதியை சுற்றி 7 ஆம்புலன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.