சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதி இன்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும்போது தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து நிறுத்தவைக்கப்பட்டிருந்த இடிப்பு பணிகள் இன்று தொடங்கிய நிலையில் கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது.
தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31-ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் இக்கடையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவஇடம் விரைந்து தீயை அணைக்க 3 நாட்களாக போராடினர். 60 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டன. மேலும் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடினர். எனினும் மீண்டும் மீண்டும் அக்கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
4 மாடிகள் விழுந்தன
இதனால் தீயை அணைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது. இதனிடையே கட்டடத்தின் 4 மாடிகளும், முகப்பு பகுதிகளும் இடிந்து விழுந்தன. இதனால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஜாக்கட்டர் கொண்டு...
மேலும் தானாக விழுந்தால் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால் கட்டடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஜாக்கட்டர் இயந்திரம் கொண்டு இந்த கட்டடத்தை தரைமட்டமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
பழமையான இயந்திரம்
இந்நிலையில் இயந்திரங்கள் பழமையானது என்பதால் அடிக்கடி பழுதாவதாலும் இடிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி வழக்கம் போல் கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது பெரிய ஸ்லாப் சரிந்து ஜேசிபி இயந்திரத்தின் மீது விழுந்தது.
தொழிலாளி மரணம்
இதனால் ஜேசிபி இயந்திரம் உடைந்தது. அப்போது சரிவு ஏற்பட்டபோது அங்கு பணியாற்றிய தொழிலாளி இடிபாடுகளுக்குள் புதைந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அவரை இடிபாட்டில் இருந்து மீட்டனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் ஊத்தங்கரையைச் சேர்ந்த சரத்குமார் (21) என்பது தெரியவந்தது. இதனால் கட்டடம் இடிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
முன் பகுதி இடிந்தது
இந்நிலையில் கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது கட்டடத்தின் முன்பகுதி தானாகவே இடிந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 17 நாள்களாக இந்த பணிகளால் அருகில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கத்து கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.