தீவிபத்தில் நாசமான சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி... 3-ஆவது நாளாக நடைபெறுகிறது
தீவிபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியானது 3-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
சென்னை: தீவிபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியானது 3-ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. ஜாகட்டர் இயந்திரம் மூலம் இப்பணிகள் நடைபெறுகிறது.
உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸில் கடந்த புதன்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வந்தனர்.
கட்டடத்தில் இருந்த 11 பேரை உயிருடன் மீட்டு விட்டனர். எனினும் தீயை அணைக்க 32 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வந்தனர்.
கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்தது
இந்நிலையில் கரும்புகை உள்ளேயே சூழ்ந்து கொண்டு வெளியேற வழியில்லாததால் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. இதைத் தொடர்ந்து கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
மீண்டும் தீ
கட்டடத்தின் 7-ஆவது மாடியில் நேற்று மீண்டும் தீப்பிடித்தது. இதனால் புதன்கிழமை நள்ளிரவில் கட்டடத்தின் 2-ஆவது மாடி முதல் 7-ஆவது மாடி வரை சரிந்து விழுந்தது. 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டது.
கட்டடத்தை இடிக்க முடிவு
இந்நிலையில் கட்டடம் தானாக இடிந்து விழுந்தால் பெரிய சேதம் ஏற்படலாம் என்பதால் இதை அதிகாரிகளாவே தகர்க்க முடிவு செய்யதனர். அதன்படி வியாழக்கிழமை கட்டடத்தை இடிப்பதற்காக பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
மீண்டும் தீப்படித்தது
இந்நிலையில் கட்டடத்தில் மீண்டும் தீப்பிடித்ததால் இந்த பணிகள் தாமதமாகின. இதைத் தொடர்ந்து ஜாகட்டர் இயந்திரங்களை கொண்டு மனிதர்கள் மூலமாகவே இடிக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இன்று இப்பணிகள் 3-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
வர்த்தகம் பாதிப்பு
இந்த பணிகளால் அக்கடைக்கு அருகில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர். அதேபோல் கட்டடம் இடிக்கும் பணிகள் நடைபெறுவதால் அந்த கட்டடத்தை சுற்றியுள்ள மக்களை போலீஸார் வெளியேற அறிவுறுத்தியதால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.