பிரம்மாண்ட கையால் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை கொத்தி இடிக்கும் 'ஜா கட்டர்' - வீடியோ
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மூன்று நாட்கள் நடைபெறும் என்பதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு வரக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை ராட்சத கிரேன்கள் மற்றும் ஜா கட்டர் என்னும் சிறப்பு எந்திரம் கொண்டு இடித்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இரண்டு நாட்களாகத் தீ பற்றியெரிந்ததில் கட்டிடம் முற்றிலும் நாசமானது. மேலும் கட்டித்தின் உறுதித்தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் கட்டிடத்தை இடிப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் பாதுகாப்பாக கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதையடுத்து, காலை கட்டடத்தை இடிக்கும் பணியில் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 'ஜா கட்டர்' என்னும் சிறப்பு எந்திரம் கட்டிடத்தை ஏழாவது மாடியில் இருந்து இடித்து வருகிறது. இப்பணி மூன்று நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் இடிக்கும் பணியை சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் பார்வையிட்டு வருகிறார். மேலும், காவல்துறையினர் பொதுமக்கள் யாரும் கட்டிடம் இடிக்கும் பணி நடைபெறும் இடத்தைப் காண்பதற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.