சென்னை சில்க்ஸ் நெருப்பை அணைக்க 6 லட்சம் லிட்டர் நீர் - ரூ.30 லட்சம் செலவு
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க பயன்படுத்திய தண்ணீருக்கு மட்டும் ரூ.30 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாம்
சென்னை: தி. நகரில் தீ பிடித்து எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தீயை அணைக்க 6 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டதாகவும், தண்ணீருக்கு மட்டும் ரூ.30 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதை கடை நிர்வாகத்தினர் கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தியாகராயா நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை கட்டிடத்தில் புதன்கிழமையன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. 36 மணிநேரம் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
இரண்டு நாட்களாக கட்டுக்குள் அடங்காமல் எரிந்து வந்த நெருப்பை தீயணைப்பு வீரர்கள் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை கொண்டு அணைத்துவிட்டனர்.
ராட்சத இயந்திரங்கள்
கட்டிடம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது அந்த கட்டிடத்தை இடிக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
ரூ.420 கோடி இழப்பு
கடையில் இருந்த பட்டுப்புடவைகள், ஆடைகள் தங்க நகைகள், ஆடைகள் என ரூ.420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை சில்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.30 லட்சம் செலவு
இந்த நிலையில், கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க பயன்படுத்திய தண்ணீருக்கு மட்டும் ரூ.30 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாம். அந்த பணத்தை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் அரசுக்கு கொடுத்துவிட்டதாகவும் நிறுவன மேலாளர் கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்
9000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 54 டேங்கர்களைக் கொண்ட லாரிகள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன. திடீர் திடீர் என எரிந்ததால் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வந்து அணைக்கப்பட்டது. 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சென்னை சில்க்ஸ் கட்டிட நெருப்பை அணைக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குடிநீர் பிரச்சினை
இந்த டேங்கர் லாரிகள் எல்லாம் குடிநீர் சப்ளை செய்யும் லாரிகள். சென்னை சில்க்ஸ் தீ விபத்தினால் தண்ணீர் லாரிகள் திருப்பி விடப்பட்டதால் இரண்டு நாட்களாக தி. நகர்வாசிகள் குடிநீருக்கு தடுமாறித்தான் போயினர்.
கம்பீரமாக எழும்
தீயில் எரிந்து இடிக்கப்பட்ட கட்டிடம் மீண்டும் அதே இடத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு கம்பீரமாக கட்டி எழுப்புவோம் என்று கூறியுள்ளார் சென்னை சில்க்ஸ் உரிமையாளர். நகைகள் அனைத்தும் லாக்கரில் பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.