தீயை அணைக்காமல் முழுவதும் எரியும் வரை வேடிக்கை பார்த்தனர்.. சென்னை சில்க்ஸ் உரிமையாளர் பகீர் புகார்
தீ விபத்தில் சிக்கி சிதைந்த தி சென்னை சில்க்ஸ் கட்டிடம் அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் என்று அதன் உரிமையாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை அதே இடத்தில் மீண்டும் உருவாக்குவேன் என்று அதன் உரிமையாளர் மாணிக்கம் கூறியுள்ளார்.
தமிழகம் கண்டிராத தீ விபத்தாக சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் 3 நாட்களாக எரிந்து வருகிறது. கட்டிடத்தின் பெரும்பாலான பகுதியில் தீ அணைக்கப்பட்டாலும், உள்ளுக்குள்ளே சூழ்ந்திருக்கும் புகை மண்டலத்தில் அவ்வபோது உள்புகும் வெளிக்காற்றால் தீ கிளம்பி வருகிறது.
இதனால் கட்டிடத்தை நேற்ற மாலை இடிக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீ விபத்து குறித்து தி சென்னை சில்க் உரிமையாளர் மாணிக்கம் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ளார்.
திட்டமிட்ட விதிமீறல் இல்லை
அதில் அவர் கூறியுள்ளதாவது, "வேண்டுமென்றே விதிமீறல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டிடத்தை கட்டவில்லை. கட்டுமானப் பணியின் போது விதிமீறல் குறித்து எடுத்துச் சொல்ல எங்களுக்கு நல்ல ஆலோசனைக் குழு இல்லை."
அலட்சியமா?
இதே போன்று "விதிமீறல் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த போது அதற்கு ஏற்ப தீ தடுப்பு நடவடிக்கைகள் உள்பட தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. எப்போதுமே யாராவது ஒருவர் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கட்டிடத்தை சுற்றி அவ்வபோது பார்வையிட்டு வருவார்கள்" என்றார்.
வேடிக்கை பார்த்தார்களா?
தீ விபத்து நடந்த அன்று காலையில் சம்பவ இடத்திற்கு சென்று நான் பார்த்தேன். எங்களது கடின உழைப்பு தீயில் கருகிக் கொண்டிருந்தது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் கூலாகவே தீயணைப்புப் பணியை செய்தனர். மீட்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்கியிருக்கலாம், ஆனால் கட்டிடம் முழுவதும் எரியட்டும் என்று அவர்கள் வேண்டுமென்றே வேடிக்கை பார்த்ததாகவும் மாணிக்கம் குற்றஞ்சாட்டினார்.
ரூ. 200 கோடி இழப்பு
ஏறத்தாழ 200 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கும், நகைக்கடையில் வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் இடிபாடுகளுக்கு மத்தியில் புதைந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவை பாதுகாப்பு பெட்டகத்தில் தான் இருந்தன என்றாலும் அதன் தலைவிதி என்ன என்பது தெரியவில்லை.
விரைவில் புதிய கட்டிடம்
பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டாலும் நான் சோர்ந்து போய்விட மாட்டேன். கட்டிட இடிபாடு வேலைகள் முடிந்தது, அதே இடத்தில் முறையான விதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் தி சென்னை சில்க்ஸ் அதே இடத்தில் அமைக்கப்படும் என்றார்.