குட்டி மெரீனாவாக மாறிய சிறுசேரி எல்காட் ஐடி வளாகம்.. 5வது நாளாக ஆர்ப்பரிக்கும் போராட்டம்!
சென்னை சிறுசேரி எல்காட் வளாகத்தில் ஐடி ஊழியர்கள் இன்று 5வது நாளாக போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான ஊழியர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: சிறுசேரி எல்காட் வளாகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐடி ஊழியர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் திரையுலகினர், வணிகர்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள எல்காட் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், பீட்டாவை தடைசெய்ய வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களும் இயங்கவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.