மிதக்கும் சென்னை: நாலு நாள் மழைக்கே நாறிப்போன தலைநகரம் - தவிக்கும் மக்கள்
சென்னை: சிங்காரச் சென்னை... எழில்மிகு சென்னை... கிரேட்டர் சென்னை என்று பாராட்டப்படும் சென்னை மாநகரம் கடந்த நான்கு நாட்களாய் பெய்த மழைக்கு வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதை தொலைக்காட்சி வாயிலாக பார்க்கும் மக்கள் துக்கம் விசாரிக்கின்றனர். மழை விட்டும் வெள்ளம் வடியாத காரணத்தால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உங்க வீட்டுப்பக்கம் எப்படியிருக்கு வெள்ளமா? வீட்டை விட்டு வெளியே வரமுடியுதா? வீட்டுக்குள்ள தண்ணீ நிக்குதே எப்படி தூங்குறாங்க? என்றெல்லாம் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்றுதான் தெரியவில்லை.
மயிலாப்பூர் பக்கம் அதுவும் மேட்டுப்பாங்கான பகுதிகளில் குடியிருப்பவர்கள் தப்பித்து விட்டார்கள். அதேநேரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம்
சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் முடங்கி கிடக்கிறார்கள்.
வெள்ளத்தில் சிக்கிய பகுதிகள்
கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வியாசர்பாடி, வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர் வடக்கு ரயில் நிலையம், கோயம்பேடு, சேத்துப்பட்டு, கிண்டி, சைதாப்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர்
உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மூழ்கிய பகுதிகள்
தண்டையார்பேட்டை மண்டல கட்டுப்பாட்டில் உள்ள வியாசர்பாடி ஏ.பி.சி கல்யாணபுரம், லட்சுமிபுரம், சத்யமூர்த்தி நகர், சாமந்தி பூ காலனி, முல்லைநகர், லேபர் காலனி, நேரு நகர், உதயசூரியன் நகர்,
எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் மட்டும் சுமார் ஒரு
லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
பூச்சி, புழுக்கள் படையெடுப்பு
வெள்ளநீருடன், கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பூச்சிகள், புழுக்கள் படையெடுப்பதால் குடியிருப்புவாசிகள் அக்கம் பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடும் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா உள்ளிட்டோர் வெள்ளநீரை வெளியேற்றவும், நிவாரணப்பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.
கழுத்தளவு தண்ணீர்
மழை விட்டாலும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. வியாசர்பாடி ரயில்வே பாலத்துக்கு கீழே கழுத்தளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை கடக்க முடியாமல் மக்கள் நீந்தி செல்கின்றனர். இருச்சக்கர வாகனங்களை மீன்பாடி வண்டிகளில் ஏற்றி அந்தப்பகுதியை கடக்கின்றனர். குழந்தைகளும், பெண்களும் அந்தப்பகுதியை கடக்க முடியாமல் தவித்தனர். போக்குவரத்தும் அந்தப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
ப்ரிட்ஜ், ஏசி எல்லாம் வீணாப் போச்சே
பெரம்பூர் ஜமாலியா பகுதியில் இடுப்பளவுக்கு மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இவ்வழியாக செல்லும் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டனர். ஓட்டேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கீழ்தளத்தில் உள்ள வீடுகள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டன. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்து நாசமாகி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வெறிச்சோடிய சாலைகள்
தொடர் மழை காரணமாக வெள்ளம் தேங்கியதால் சரியான நேரத்துக்கு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். சென்னை நகரத்தில் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது பெருமழை. பிசியான கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பலர் விடுமுறை எடுத்து வீடுகளிலேயே முடங்கி விட்டனர்.
பள்ளமான சாலைகள்
மழை வெள்ளத்துக்கு அரித்துச் செல்லப்பட்ட சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கின. சென்னையில் பெரும்பாலான சாலைகள் செல்லரித்து
காணப்படுகின்றன. குண்டும், குழியுமான சாலைகளில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் சிலர் விழுந்து எழுந்து செல்கின்றனர். இந்த காட்சிகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
தண்ணீர் தேங்கியது ஏன்?
வடசென்னையில் வெள்ளநீர் தேங்குவது ஒருபுறம் இருக்க தென் சென்னையில் வேளச்சேரி, புழுதிவாக்கம், மடிப்பாக்கம் என அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம் எப்போ வடியுமோ? என்று காத்திருக்கின்றனர் சென்னைவாசிகள். மிதக்கும் சென்னையை ஊடகங்களில் பார்ப்பவர்கள்தான் எவ்ளோ தண்ணீ பாரேன் என்று ஆச்சரியப்படுகின்றனர்.இதை விட பெரிய வெள்ளமெல்லாம் சென்னையில வந்திருக்கு மவுண்ட்ரோடுல போட்டு விட்டவங்க நாங்க என்று சமூக வலைத்தளங்களில் பெருமை பேசிக்கொள்கின்றனர் சென்னைவாசிகள்.
வருமுன் காப்போம்
அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் என்று தெரிந்தும் வடிகால் வசதிகளை சரியாக பராமரிக்காததே வெள்ளநீர் தேங்குவதற்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டினர். சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் சாலை அமைக்கவே மாநகராட்சி அதிக அக்கறை செலுத்தியது. இதனால் மழை நீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. வருமுன் காக்க தவறிவிட்டது மாநகராட்சி என்கின்றனர் சென்னைவாசிகள்.
நோய் பரவும்
கழிவு நீர் செல்லக்கூடிய கால்வாய்களில் மழை நீர் புகுந்ததால் பலப்பகுதிகளில் தூர்நாற்றம் வீசுகிறது. இதை நிலை நீடித்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. டெங்கு, காலரா ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்றும் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். நாலு நாட்கள் மழைக்கே இப்படி நாறிப்போச்சே... இனி வரப்போகிற மழையை எப்படி சமாளிக்குமோ மாநகராட்சி, என்று நினைத்தே பலருக்கும் காய்ச்சல் வந்துவிட்டது.