எங்கள் அனிதா மரணத்துக்கு நீதி எங்கே? சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி!
சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட மாணவர் அமைப்பினர் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட மாணவர் அமைப்பினர் முயற்சித்தனர். அப்போது போலீஸார் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் அண்ணா சாலை, நீட் கவுன்சலிங் நடைபெறும் இடங்களில் பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயற்சித்தனர். தீவுத்திடல் வழியாக தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.
அப்போது அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் அவர்களை போலீஸார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சுமார் அரைமணிநேரமாக போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் முற்றுகையிடுவதற்கு முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக போலீஸார் கைது செய்தனர்.