மருமகனை துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ... மகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்ததால் ஆத்திரம்
சென்னை : மருமகன் மீது காவல் துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சங்கரபாண்டியன். இவரது மகள் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், தனது மருமகனுடன் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், தனது மகள் மீண்டும் அவரது கணவருடன் சேர்ந்து வாழ்வதை விரும்பாத காவல்துறை உதவி ஆய்வாளர் சங்கரபாண்டியன், தனது மருமகனை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
மயிலாப்பூர் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள மசூதி அருகே, இச்சம்பவம் நிகழ்ந்தது. மயிலாப்பூர் பகுதியில் வந்து கொண்டிருந்த தனது மருமகனுடன் சங்கரபாண்டியனுக்கு தகராறு ஏற்பட்டதாகவும், இதையடுத்து திடீரென ராஜசேகர் மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில், குண்டுகள் பாய்ந்த நிலையில் காயமடைந்த ராஜசேகர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.