பொன்னேரியில் பொங்கி எழுந்த மாணவர்கள்.. ரயில் மறியல்.. புறநகர் சேவை பாதிப்பு!
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் பொன்னேரியில் மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் பொன்னேரியில் மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கனவு நிறைவேறாத சோகத்தில் மாணவி அனிதா தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவ வாய்ப்பு கிடைக்காத மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பொன்னேரி ரயில் நிலையத்தில் அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர் வகுப்புகளை புறக்கணித்து பேருந்து நிலையம், நகர் முழுவதும் பேரணியாக சென்றனர். ஏழைகளுக்கான கல்வியில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கூடாது என்று மாணவர்கள் கோஷமிட்டு வந்துள்ளனர்.
திடீரென மாணவர்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் புகுந்து சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டுநோக்கி சென்று கொண்டிருந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் ரயில் தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரை மணி நேரமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதே போன்று பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களைச் சேர்ந்த வழிக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து அமைதி ஊர்வலம் நடத்தினர்.
மேலும் புரட்சிகர மாணவ அமைப்பினரும் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களின் பரிதான கோரிக்கையாக உள்ளது.