காவிரிக்காக கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடுமா சிஎஸ்கே? - மைக் ஹஸ்சி பதில்
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது, அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என திமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என வேல்முருகன் போன்ற கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடக்கலாம், ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடலாம் என நடிகர் ரஜினிகாந்த் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று பயிற்சிக்காக சேப்பாக்கம் மைதானம் வந்திருந்த சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சியிடம் நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மைக் ஹஸ்சி, தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது. கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன்தான், முடிவு செய்வார். காயம் காரணமாக கேதர் ஜாதவ் சிஎஸ்கே அணியில் இருந்து் வெளியேறுகிறார் என்றார்.
நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மோத உள்ளது. தமிழகத்தை சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணி கேப்டனாக உள்ளார். அவரிடமும் கருப்பு பேட்ஜ் பற்றி வினா எழுப்பப்பட்டது. அவர் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.