வழக்கம் போல மிதக்கும் தரமணி.. எம்ஜிஆர் சாலையில் பள்ளம் தெரியாமல் விழுந்து 20 பேர் காயம்!
சென்னையில் தரமணி சாலையில் சூழ்ந்துள்ள வெள்ள நீரால் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் விழுந்ததில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
சென்னை : சென்னையின் பிரதான சாலையான தரமணியில் சூழ்ந்து கொண்டிருக்கும் மழை நீரால் பள்ளம் தெரியாமல் விழுந்ததில் வாகன ஓட்டிகள் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் 36 மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழையால் நகரின் பிரதான சாலைகள் மழை நீரில் மிதக்கின்றன. குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை தரமணியின் எம்ஜிஆர் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் தேங்கி நிற்கும் நீரில் வாகனங்கள் நீந்திச் செல்கின்றன. மேலும் பள்ளம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தரமணி மட்டுமின்றி சென்னையின் வால்டாக்ஸ் சாலை, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளின் நிலைமை இதே போன்று தான் உள்ளது. எனவே குறைந்தபட்சமமாமக எச்சரிக்கையாவது வைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் உடனடி தேவையாக இருக்கிறது.