உமா மகேஸ்வரி கொலை- ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது கேமராவில் சிக்கிய கொலையாளிகள்
சென்னை: பெண் என்ஜீனியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா உதவியால், கொலையாளிகளை கைது செய்ததாக சி.பி.சி.ஐ,டி. ‘ஐ.ஜி' மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி இரவு பணி முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த டிசிஎஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரியின் உடல் கடந்த சனிக்கிழமையன்று அவரது அலுவலகத்திற்கு அருகிலேயே மீட்கப்பட்டது.
உமா மகேஸ்வரியின் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதால், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதனைத் தொடர்ந்து விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் இருவரைப் போலீசார் கைது செய்தனர். உமா மகேஸ்வரியில் செல்போன் மற்றும் கிரெடிட் கார்டை பயன் படுத்தியதன் மூலம் அவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.
இது தொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி மகேஷ்குமார் பேட்டியளித்தார். பேட்டியின்போது வடக்கு மண்டல ஐ.ஜி.மஞ்சுநாதா, காஞ்சீபுரம் சூப்பிரண்டு விஜயகுமார், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டுகள் அன்பு, நாகஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்..
பேட்டியில் அவர் கூறியதாவது:-
கண்காணிப்பு கேமரா துப்பு :
பெண் என்ஜீனியர்கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா, குற்றவாளிகளை பிடிக்க உதவி உள்ளது. கொலையாளிகள் பெண் என்ஜீனியயரை கொலை செய்தவுடன் அவர் வைத்து இருந்த வங்கி கிரெடிட் கார்டு மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று உள்ளார்கள். வரும் வழியில் கிரெடிட் கார்டு மூலம் குறிப்பிட்ட வங்கியில் பணம் எடுக்க முயற்சித்து உள்ளனர்.
சிவப்புச் சட்டை பறிமுதல் :
ஆனால், அவர்களால் பணம் எடுக்க முடியவில்லை. பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்ட கொலையாளி உத்தம் மண்டலின் உருவம் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அப்போது உத்தம் மண்டல் சிவப்பு கலர் சட்டை அணிந்து உள்ளான். அந்த கேமரா காட்சியை வைத்து அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, எங்களுக்கு துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்தோம். கேமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம்.
13ம் தேதி கொலை :
கொலையாளிகள் பெண் என்ஜீனியர் வேலைபார்த்த நிறுவனத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் வைத்து அவரை கடத்திச் சென்றுள்ளனர். 13-ந்தேதி அன்று இரவே பெண் என்ஜீனியரை கொலை செய்துவிட்டனர்.
யாருக்கு பரிசுத்தொகை :
இந்த வழக்கில் துப்பு துலக்க 170 போலீசார் பயன்படுத்தப்பட்டனர். பரிசுத்தொகை ரூ.2 லட்சத்தையும் யாரிடம் கொடுப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது ரகசியமானது. வழக்கு விசாரணை முடிந்த பிறகு முழுவிவரமும் தெரிவிக்கப்படும்.
விசாரணை:
கைதான குற்றவாளிகள் மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் உத்தம் மண்டல் திருமணம் ஆனவர். அவரது மனைவி சொந்த ஊரில் இருக்கிறார். இவர்கள் வேறு ஏதாவது இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.
போலீஸ் ரோந்து :
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நிறுவனங்களில் வேலைபார்க்கும் காவலர்களோடு சேர்த்து போலீசாரும் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்து உள்ளோம்.
வெளிமாநிலத்தார் விவரம் :
அந்தப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றிவிட்டு இருட்டுப்பகுதியில் விளக்குகளை எரிய விடவும் கேட்டுள்ளோம். அங்குள்ள பெரும்பாலான கம்பெனிகளில் முன் வாசல் கேட் இல்லை. இனிமேல் முன்வாசலில் கேட் பொருத்த கேட்டுள்ளோம். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் வலியுறுத்தியுள்ளோம். அந்தப்பகுதியில் வேலைபார்க்கும் வெளிமாநிலத்தவர்களின் பட்டியலை அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தினர் புகைப்படத்தோடு சேகரித்து வைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளோம்' என இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.