லீவு விட்டாச்சு... அலைமோதும் கூட்டத்தை சமாளிக்க கட்டணம் உயரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை: நெல்லையிலிருந்து சென்னைக்கு தட்கல் கட்டணத்தில் பிரிமியம் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கட்டணம் உயரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி, பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கி விட்டது. இதன் காரணமாக நெல்லையிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல கூட்டம் அலைமோதி வருகிறது. ரயிலில் பயணம் செய்ய காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் ஜூன் முதல் வாரம் வரை பல ரயில்களில் டிக்கெட் இல்லை. இந்த நிலையில பயணிகளின் நெரிசலை பயன்படுத்தி நெல்லை-சென்னை இடையே பிரிமியம் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை-சென்னை இடையே வண்டி எண் 06746 வரும் ஏப்ரல் 25ம் தேதி மே 2ம் தேதி வெள்ளிக்கிழமைகளில் பிரிமியம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.05 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னை-நெல்லை ரயில் எண் 06745 சென்ட்ரல் ரயில நிலையத்திலிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் வந்து சேரும். இந்த ரயில் ஏப்ரல் 25ம் தேதி, மே 2 ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படும்.
இந்த ரயிலில் இரண்டு ஏசி வசதியுள்ள 46 இருக்கைகளும், 2ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டியில் 715 இருக்கைகளும், மூனறடுக்கு ஏசி வசதியுள்ள பெட்டியில் 378 இருக்கைகளும் இருக்கும். இதற்கான முன்பதிவு ஏப்ரல் 15 மற்றும் 22ம் தேதிகளில் துவங்குகிறது. இந்த ரயிலில் இணைய தளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு மட்டுமே முன்பதிவு செய்யலாம். கோடை விடு்முறை கூட்டம் அதிகமாக இருப்பதால் கடடணம் அதிகரிக்கப்படலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.