ஆன்லைன் மோசடியில் சென்னை முதலிடம்... ஒரே ஆண்டில் ரூ. 16 கோடி மக்களிடம் இருந்து அபேஸ்
சென்னை: சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக சென்னைவாசிகளிடம் ஆன்லைன் மூலம் 16 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
வங்கி மோசடி, ஆன்லைன் மோசடிகளை தடுப்பது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசிய மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். சைபர் குற்றங்கள் மூலம் பணம் கொள்ளையடிக்கப்படும் ஆபத்துகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேசுகையில் , " போலீசாருக்கு வரும் மோசடி புகார்களில் 70 சதவீத ஆன்லைன் மோசடிகள், வங்கிகள் தொடர்பானவை .
ஆன்லைன் மோசடிகள் நூதன முறையில் நடைபெறுகின்றன. அது தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் போதாது என்று தெரிவித்த அவர், பொதுமக்கள் பணத்தை பாதுகாக்க வங்கிகள் காவல்துறையோடு இணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
ஆன்லைன் மோசடியில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்றும் ஒரே ஆண்டில் ரூ. 16 கோடியை வாடிக்கையாளர்கள் சென்னையில் இழந்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பின் தெரியாத எண்களில் இருந்து செல்போன்களுக்கு வரும் அழைப்புகளை ஏற்கவேண்டாம் என்றும், அந்த எண்களில் பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை சொல்ல வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.