இதோ இவர்தான் உண்மையான சூப்பர் போலீஸ்.. சோழிங்கநல்லூரைக் கலக்கும் "டான்ஸிங்" குமார்!
சென்னை: நாம் அடுத்தவர்களைப் பார்த்து என்ன செய்கிறோம் என்பதை விட நம்மைப் பார்த்து நாலு பேருக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் வகையில் நாம் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அப்படி ஒரு மனிதரை சோழிங்கநல்லூர் மக்கள் தினசரி தரிசித்து புத்துணர்ச்சி பெற்று வருகின்றனர்.
இவர் ஒரு சாதாரண போக்குவரத்துக் காவலர்தான். ஆனால் இவரது பணியும், இவரது செயல்பாடுகளும் அசாதாரணமானவை. தனது கடமையில் காட்டும் அக்கறை, எப்போதும் சுறுசுறுப்பு, சலிப்பே இல்லாமல் சந்தோஷமாக பணியாற்றுவது, நடன அசைவுகள் மூலம் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது என அசத்திக் கொண்டிருக்கிறார் காவலர் குமார்.
சூப்பர் காப் என்றும் பல்வேறு மரியாதை செலுத்தியும் காவலர் குமாரை பேஸ்புக் உள்ளிட்டவற்றில் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை படு வேகமாக கவர்ந்து வருகிறார் குமார்.
சூப்பர் குமார்
சென்னைக்கு அருகாமையில் உள்ள சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றிவரும் குமார் என்பவர் அன்றாடம் பணிக்கு கிளம்பும்போது தன்னை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தங்களது நாளை தொடங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடனும் கடமையாற்ற செல்கிறார்.
இன்முகத்துடன் பணி
ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் இவர், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் சற்றும் சோர்வின்றி இன்முகத்துடன் தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்.
டான்ஸிங் குமார்
இந்த கடமையின்போது கைகளை நடன முத்திரைகளைபோல் ஆட்டியும், வேகமாக விசில் அடித்தும், உடலை வளைத்து, நெளித்தும் சாலைகளில் செல்லும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைக்கிறார். தன்னை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகன ஓட்டிகளையும் தனது வாடிக்கையாளராக கருதுவதாக கூறும் குமார், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
அன்புக்கு மறு பெயர் குமார்
முதியவர்கள் சாலையை கடக்க உதவுவதுடன், தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தும் அவர்களின் தாகத்தை தணிக்கிறார். கண்ணுக்கு தென்படும் மனிதர்களிடத்தில் அன்பு செலுத்தாத யாரும், கண்களுக்கு புலப்படாத கடவுளிடத்தில் எப்படி அன்பு செலுத்த முடியும்? என்று கேட்கும் போக்குவரத்து காவலர் குமாரின் கடமை உணர்வும், கனிவான பேச்சும், களைப்பின்றி, உற்சாகத்துடன் பணியாற்றும் பாணியும் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.
வைரல் வீடியோ
குமார் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆக பரவி வருகிறது. கடந்த 22 வருடமாக காவல்துறையில் பணியாற்றி வருகிறாராம் குமார். இவர் பணியில் இருக்கும் சாலைகளில், இவர் பணியில் இருந்தால் ஒரு விபத்து கூட நடக்காதாம். அந்த அளவுக்கு அற்புதமாக பணியாற்றுவாராம் குமார்.
சல்யூட் பாஸ்!
என்னை கடந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் அனைவரும் மாலையில் பத்திரமாக வீடுபோய் சேர்ந்தார்கள் என்ற மனநிறைவுடனும், நிம்மதியுடனும் என்னுடையை ஒவ்வொரு நாளும் கழிகிறது என்று கூறும் குமாருக்கு சல்யூட் வைக்க இரண்டு கை போதாது பாஸ்...!