காவிரி வாரியத்திற்காக திமுக சாலை மறியல்... சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெறும் சாலை மறியல் போராட்டங்களால் சென்னையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 3வது நாளாக ரயில் மறியல், சாலை மறியல், விமான நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் திமுக நடத்தி வரும் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவான மார்ச் 29க்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால் தமிழகமே போராட்டக் களமாகியுள்ளது. விவசாய சங்கங்கள், அதிமுக, திமுக, காங்கிரஸ் என பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுமே போராட்ட களத்தில் இறங்கியுள்ளன. திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் காவிரி வாரியம் அமைக்கக் கோரி 3வது நாளாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஓட்டேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட சேகர் பாபு, மடிப்பாக்கம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் மேயர் மா. சுப்ரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தியாகராய நகரில் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரங்கநாதன் சுரங்கப்பாதை, மதுராந்தகம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு போராட்டம் என்று திமுகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று சென்னை தேனாம்பேட்டையில் திமுகவின் கு.க.செல்வம் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நகரின் முக்கிய சாலைகளில் திமுகவினர் நடத்தி வரும் மறியல் போராட்டங்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் திடீரென மறியலில் இறங்கும் எதிர்க்கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தியும், கைது செய்தும் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.