கே.கே.நகரில் இளைஞர் பலி.. பொதுமக்கள் இன்ஸ்பெக்டரை தாக்கும் வீடியோ... வாட்ஸ் அப்பில் பரவுகிறது!
சென்னை: சென்னை கே.கே.நகரில் போலீசார் விரட்டியதில் இளைஞர் ஒருவர் நிலைதடுமாறி சாலை தடுப்பு கம்பி வயிற்றில் குத்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை சரமாரியாகத் தாக்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை கே.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதில் வண்டி நிலை தடுமாறி, செல்வம் என்ற இளைஞர் சாலை தடுப்பு கம்பி வயிற்றில் குத்தி குடல் சரிந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து ஆத்திரமடைந்த மக்கள், சற்குணத்தை சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்து விரைந்து வந்த கே.கே.நகர் போலீசார், பொதுமக்கள் பிடியில் இருந்து சற்குணத்தைக் காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தக் காட்சிகளை சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
தற்போது அந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சற்குணத்தை தாக்கியவர்களைப் போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே, செல்வம் பலியானது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு ஜெயஸ்ரீ நேற்று 10-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளார். மேலும், விபத்து நடைபெற்ற இடத்தில் இருக்கும் கடைக்காரர்கள், செல்வத்தின் தாய் லட்சுமி மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று 2-வது நாளாக தனது விசாரணையைத் தொடர்ந்தார் மாஜிஸ்திரேட்டு ஜெயஸ்ரீ . இன்ஸ்பெக்டர் சற்குணம் மற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இதன் பின்னர் தனது அறிக்கையை அவர் தாக்கல் செய்வார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்த செல்வத்தின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். முன்னதாக அவரது உடலைப் பெற அவர்கள் மறுத்து வந்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக கே.கே.நகர் பகுதியில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.