விடாமல் துரத்தும் மழை, சீக்கிரமே இருளடைந்த வானம்... சென்னையில் மீண்டும் டிராபிக் ஜாம்!
சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வருவது மற்றும் சாலைகளில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீர், மாநகரப் பேருந்து கோளாறாகி நிற்பது உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
சென்னை : சென்னையில் இன்று காலை முதல் விடாமல் பெய்து வரும் மழையாலும், சீக்கிரமே இருள் சூழ்ந்து விட்டதாலும் சாலைகளில் வாகனங்கள் மெதுவாகவே செல்கின்றன. இதனால் சென்னையின் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை வலுப்பெற்றுள்ளதால் இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. விடாமல் கொட்டித் தீர்க்கும் மழையால் நகரின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையால் இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காலையில் 9 மணியளவில் தொடங்கி மழை பெரிய அளவில் போக்குவரத்தை பாதிக்கவில்லை.
மாலையில் இருள்
ஆனால் மாலை 5 மணிக்கே இருள் சூழ்ந்துவிட்டதாலும், சாலைகளில் இருக்கும் பள்ளங்களில் நீர் தேங்கி நிற்பதாலும் வாகனங்கள் ஆமை வேகத்திலேயே சாலையில் நகர்ந்து செல்கின்றன. மேலும் ஆங்காங்கே சென்னை மாநகராட்சியின் பேருந்துகளும் பிரேக் டவுன் ஆகி நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம் அருகே ஜாம்
சென்னையில் வள்ளுவர்கோட்டம் ஆர்காடு சாலை முதல் கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டர் வரையிலான சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதே போன்று அண்ணா சாலை ஒயிட்ஸ் ரோட்டில் இருந்து டிஎம்எஸ் வரை வரும் சாலையும் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளது. டிஎம்எஸ் பகுதியில் சாலைகளில் இருக்கும் பள்ளங்களில் தேங்கி இருக்கும் மழைநீரால் இந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
பாரீஸில் போக்குவரத்து ஜாம்
பாரிஸ் பர்மா பஜார் முதல் மண்ணடி வரையிலான சாலை, பல்லவன் இல்லம் முதல் தீவுத் திடல் வரையிலான சாலையும் வாகன நெரிசலால் திணறுகிறது. நந்தனம், ஆழ்வார்பேட்டை சாலையும் அரும்பாக்கம், ஷெனாய் நகர், வழியாக கோயம்பேடு இணைப்பு சாலையும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது.
அசோக் பில்லர் பகுதியிலும்
வடபழனி, அசோக் பில்லர், அசோக் நகர் மெயின் அவென்யூ, நியூ போக் ரோடு, அம்பத்தூர் சாலையும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. கிட்டத்தட்ட மழை பெய்த அனைத்துப் பகுதியிலுமே இயல்புநி லை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.