சென்னை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: அசாமில் வெடிக்க வேண்டிய டைம் பாம், தவறுதலாக சென்னையில் வெடித்துவிட்டதாக ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து, அசாம் தலைநகர் குவஹாத்திக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்தபோது, அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் 2014ம் ஆண்டு மே 1ம் தேதி நடைபெற்றது. இதனிடையே சிமி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஜாகிர், ஷேக் மெகபூப் மற்றும் அம்ஜத் கான் ஆகிய 3 தீவிரவாதிகளை மத்திய பிரதேச போலீசார் ஒடிசாவில் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்களுக்கு சென்னை குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சிறப்பு புலனாய்வு குழு அம்மூவரிடமும் விசாரணை நடத்தியது.
விசாரணையில், வங்கதேசத்தில் இருந்து அசாமிற்குள் அகதிகளாக நுழையும் முஸ்லிம்கள் மீது அசாம் பழங்குடியினர் தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதற்கு பழிவாங்க குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதேநேரம், அசாமிற்குள் ரயில் சென்றடைந்தபிறகு குண்டு வெடிக்க டைமரை செட் செய்திருந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறால் அது சென்னையிலேயே வெடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளை சென்னை கொண்டுவந்து விசாரிக்க வசதியாக மத்திய பிரதேச கோர்ட்டில் பாடி வாரண்ட் வாங்குவதற்கு தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.