ரயில் பெட்டியில் கொள்ளையர்கள் பதுங்கியிருந்து கொள்ளை? சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை
சென்னை: சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட ரூ.342.75 கோடியில் சுமார் ரூ. 6 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொள்ளை நடந்த ரயில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை டீசல் என்ஜின் மூலமாகவும், அங்கிருந்து சென்னை வரை மின்சார வழித்தடத்திலும் இயக்கப்பட்டிருந்தது. இதனால் விருத்தாசலத்துக்கு பின் ரெயிலில் கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது.
சேலத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது. சென்னை வந்த ரயில் பொருத்தப்பட்ட பணம் கொண்டு வரப்பட்ட ரயில் பெட்டி, முன்னர் ஈரோட்டிலும், அதற்கு முன்னர் கேரளாவிலும் நிறுத்தப்பட்டிருந்தது.
எனவே அந்த இடங்களில் ரயில் பெட்டியில் துளை போடப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி கேமராவில் ஆய்வு
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக துப்பு துலக்க ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சோதனை செய்த போது, கொள்ளை நடந்த ரெயிலின் மேற்கூரை பதிவாகி இருந்தது. அதில் கொள்ளை நடந்த அந்த பெட்டியின் மேற்கூரை உடைக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.
சென்னையில் தான் கொள்ளை?
இதனால், ரயில்ல் சென்னைக்கு வந்த பின்னர்தான் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்கிற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி குறித்து போலீஸார் கூறியதாவது: தாம்பரத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் தெளிவாக இல்லை. அதனை துல்லியமாக தெரியும் அளவுக்கு நவீன முறையில் ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே இது குறித்து தெரிவிக்க முடியும் என்று கூறினர்.
ரயில் பெட்டிக்குள் கொள்ளை கும்பல்
சேலத்தில் இருந்து ரயில் பெட்டியில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்டபோதே கொள்ளை கும்பல் பெட்டிக்குள் பதுங்கி இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், ரயில் எழும்பூர் வரும் வரை காத்திருந்து சேத்துப்பட்டு யார்டுக்கு ரயில் சென்றபின்னர் பெட்டிக்குள் இருந்தபடியே கொள்ளையர்கள் மேற்கூரையை உடைத்து ரூ.6 கோடி பணத்தை கொள்ளையடித்திருக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
போலீஸாரிடம் விசாரணை
கொள்ளை நடந்த அன்று சேத்துப்பட்டு யார்டு மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் ஆகியோரிடம் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அந்த கடந்து வந்த பாதை மற்றும் ரயில் நிலையங்களிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பே வந்த ரயில் பெட்டி
பணம் கொண்டு செல்லப்பட்ட ரயில் பெட்டி 2 நாட்களுக்கு முன்னதாகவே கோவை ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ரயில் நிலைத்திற்கு அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. முத்துசாமி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார் கோவை ரெயில் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கொள்ளை ரயில் பெட்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தை ஆய்வு செய்த போலீஸார், ரயில் நிலைய அதிகாரிகள், பார்சல் புக்கிங் அலுவலர்கள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.
சின்ன சேலத்தில் சிசிடிவி கேமரா இல்லை
இதேபோல, சின்னசேலம் பகுதியிலும் போலீசார் ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அங்கு ரயில் நிலையத்தில் கேமரா பொருத்தப்படாமல் இருந்ததையடுத்து ரயில் நிலையம் அருகே உள்ள சக்தி குடியிருப்பு பகுதிக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தண்டவாளத்தின் அருகே உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
விருத்தாச்சலம்
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை விசாரணை நடத்தினர். அப்போது, இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரயில் நிலைய அதிகாரி ஜெகதீசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடமும் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
ரயில்கள் மெதுவாக இயக்கப்படும் பகுதி
சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரயில்வே சுரங்கப்பாதை பணியும், தண்டவாளம் சீரமைக்கும் பணியும் நடந்து வருவதால், அவ்வழியாக ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் காட்டுப்பகுதியும் இருப்பதால், அங்கு ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு உதவி ஆணையர் விணுதேவ்சச்சின் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
சிசிடிவி கேமராவில் சிக்கவில்லை
பொதுவாக ரயில் நிலைய நடைமேடையை மட்டுமே கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்பதால், சிசிடிவி கேமராவில் பதிவாகாதாவாறு ரயில் பெட்டியின் மேற்கூரை வழியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரயில் பெட்டியின் மேற்கூரையையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.