சென்னை குண்டுவெடிப்பு: ''அல் உம்மா அல்லது இந்தியன் முஜாஹிதீன் காரணமாக இருக்கலாம்''
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பை அல் உம்மா அல்லது இந்தியன் முஜாஹீன் அமைப்பைச் சேர்ந்தவர்களே நடத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
சென்னை போலீஸின் சிபிசிஐடி பிரிவு அதிகாரிகள் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அல் உம்மா மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள் மீது போலீஸின் சந்தேகம் திரும்பியுள்ளதாம். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தீவிரவாதப் பின்னணியுடன் யாரையும் இதுவரை கைது செய்யவும் இல்லை.
இருப்பினும் இதுவரை நடந்த விசாரணையின் முடிவில், குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு வருவதற்கு முன்பே ரயிலில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் உறுதியாக நம்புகின்றனராம்.
டைம் பாம்
இதற்கிடையே இந்த வெடிகுண்டு டைம் பாம் வகையைச் சேர்ந்தது என்பதை வெடிகுண்டு நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறைந்த சக்தி கொண்டது இது என்றும் தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்ட குண்டுகளை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் முன்பு நாட்டின் பல பகுதிகளில் பயன்படுத்தியிருப்பதால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் திரும்பியுள்ளது.
மேலும் 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பின்போது இதே போன்ற குண்டுகளைத்தான் அப்போது அல் உம்மா அமைப்பும் பயன்படுத்தியது. அதேபோ பாஜக, ஆர் எஸ்எஸ் தலைவர்களைக் குறி வைத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்பிலும் இதேபோன்ற குண்டுகள்தான் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திராவில் வைத்து போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களது முக்கிய கூட்டாளியான அபுபக்கர் சித்திக் இன்னும் தலைமறைவாக உள்ளார். எனவே இவர்கள் மீதும் போலீஸ் சந்தேகம் திரும்பியுள்ளதாம்.
தலைமறைவாக உள்ள சித்திக்கைப் பயன்படுத்தி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டுவெடிப்பைநடத்தியிருக்கலாம் என்பதும் போலீஸாரின் இன்னொரு சந்தேகம்.