தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி... சென்னையில் சோகம்!
சென்னை: குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை ஒன்று பலியான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில், பள்ளிக்கரணையில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாத இரண்டரை வயது வகீஸ் என்ற குழந்தை, வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது, தெரியாமல் அந்நீரில் காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அப்போதே புகார் அளிக்கப் பட்டதாகவும், அரசு மழையால் சேதமடைந்த சாலைகளை சீர் செய்வதில் மந்தம் காட்டுவதால் தற்போது குழந்தை ஒன்றும் பலியாகி உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.