வீட்டுச் சுவரில் சிறுநீர் கழித்த நாய்: தட்டிக் கேட்ட எஸ்.ஐ.க்கு அடி உதை - 2 பேர் கைது
சென்னை: தினந்தோறும் வீட்டுச் சுவரில் நாய் சிறுநீர் கழிப்பதைத் தட்டிக் கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த இருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் விபிபி அவென்யூவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் லோகு தினந்தோறும் தனது நாயை வாக்கிங் அழைத்து செல்வது வழக்கம். அப்போது, அந்த நாய் தமிழ்வாணன் என்பவரது வீட்டுச் சுவரில் சிறுநீர் கழித்து வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன், இது தொடர்பாக லோகுவிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த லோகு, தனது பெரியப்பா மகன் முகேஷை அழைத்து வந்து தமிழ்வாணனிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது தமிழ்வாணன், "நான் துரைபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர்!" எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாத லோகுவும், முகேஷும் தமிழ்வாணனை அடித்து உதைத்துள்ளனர்.
உடனடியாக இது குறித்து துரைப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் தமிழ்வாணன். விரைந்து வந்த காவலர்கள் லோகு மற்றும் முகேஷைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.