சென்னை வடபழனியில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கோவில் அர்ச்சகர் அதிரடி கைது!
சென்னை வடபழனி அர்ச்சகர் மனைவி ஞானப்பிரியா கொலை வழக்கில் அவரது கணவர் பாலகணேஷே கொலை செய்து விட்டு நாடகமாடியது அம்பலமானது.
Recommended Video
சென்னை: சென்னை வடபழனி சிவன் கோயில் அர்ச்சகர் மனைவி ஞானப்பிரியா கொலை வழக்கில் அவருடைய கணவர் பாலகணேஷ் மற்றும் நண்பர் மனோஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி சிவன் கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் பாலகணேஷ் (எ) பிரபு. இவரது மனைவி ஞானபிரியா. இருவரும் வடபழனி சிவன்கோவில் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி காலை வீட்டின் உரிமையாளர் விஜயலஷ்மி, குருக்கள் பாலகணேஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் வடபழனி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஞானப்பிரியா கொலை
புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு ஞானப்பிரியா தலையில் பலத்த காயத்துடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். பாலகணேஷும் வீட்டின் கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பின்னர் பாலகணேஷை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஞானபிரியா உடலை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.
நகை கொள்ளை
இந்நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞானபிரியாவை கட்டிபோட்டுவிட்டு அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கணவர் பாலகணேஷ் தெரிவித்தார்.
ஞானப்பிரியாவை மட்டும்
இந்நிலையில் நகைகளை கொள்ளையடிக்க வந்தவர்கள் ஞானப்பிரியாவை மட்டும் ஏன் கொலை செய்ய வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். பாலகணேஷின் மீது போலீஸுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பாலகணேஷின் வீட்டுக்கு யாரும் செல்லாததை அடுத்து போலீஸாரின் கவனம் பாலகணேஷ் பக்கம் திரும்பியது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பாலகணேஷ் கைது
ஞானப்பிரியாவை கொலை செய்ததை பாலகணேஷ் ஒப்புக் கொண்டார். குழந்தை இல்லாததை காரணம் காட்டி அவமானப்படுத்தியதால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியை நண்பர் மனோஜுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். கொலையை மறைக்க கொள்ளை நாடகம் நடத்த வேண்டியிருப்பதால் ஞானப்பிரியா அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பாலகணேஷே திருடி நண்பர் மனோஜ் வீட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது.