போலீஸ் அராஜகம்... சாப்பிட விடலை.. தூங்க விடலை... இழுத்துட்டு போறாங்க - பதறும் பெண்கள்
சென்னை கலவரம் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி அப்பாவி பொதுமக்களை போலீசார் கைது செய்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாப்பிட கூட விடாமல் போலீசார் அடித்து இழுத்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளத
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் 8 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திங்கட்கிழமையன்று காலையில் போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம், மர்மநபர்களால் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை போர்க்களமானது.
போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். காவல்துறையினர் நடத்திய தடியடியில் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் அருகில் இருந்த மீனவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தனர்.
தீ வைத்த போலீஸ்
திருவல்லிக்கேணி பகுதியில் நுழைந்த போலீசார் குடியிருப்பு பகுதி என்றும் பாராமல் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். வாகனங்களை தங்கள் லத்தியால் அப்போது அவர்கள் வேண்டுமென்றே சேதப்படுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. பெண் போலீஸ் ஒருவரே தீ வைத்த காட்சி பதற்றத்தை ஏற்படுத்தியது.
தேடுதல் வேட்டை
இந்நிலையில், நேற்று இரவும் ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, சிவராஜபுரம், மாட்டாங்குப்பம், நடுக்குப்பத்தில் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் ஆண்கள் பலரும் அஞ்சி வீடுகளுக்கு திரும்பவில்லை.
அடித்து இழுத்து சென்றனர்
அலறியடித்து ஓடிவந்தவர்களுக்கு வீட்டு கதவுகளை திறந்து விட்டோம். போலீசார் தள்ளிவிட்டு விட்டு இரும்பு கம்பியால் அடித்து சென்றனர் என்று பெண்கள் குற்றம் சாட்டினர். சாப்பிட கூட விடவில்லை. வீடு வீடாக புகுந்து போலீசார் தேடினர் என்றும் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அப்பாவிகளை கைது செய்வதா?
நாங்கள் எல்லாம் அப்பாவிகள், வீட்டில் அமைதியாக படுத்திருந்தவர்களை கலவரம் செய்தாக கூறி கைது செய்துள்ளனர் என்பது பெண்களின் புகார். வீட்டிற்கு ஒருவரை கைது செய்வோம் என்றும் 300 பேர் வரை போலீசார் கைது செய்ய திட்டமிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
பெண்களை மிரட்டிய போலீசார்
ஆண்கள் யாரும் இதுவரை வீடு திரும்பவில்லை. போலீஸ் கைதுக்கு அஞ்சி பலரும் வெளியில் தங்கியுள்ளனர். அவர்களை வரவழைப்பதாக வீடுகளில் உள்ள பெண்களை போலீசார் மிரட்டியதாகவும், சிலர் அடித்தாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
போராட்டகாரர்களுக்கு உதவி
மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மீனவ குடியிருப்பு பகுதியில் இருந்தவர்கள்தான் உதவி செய்தனர். திங்கட்கிழமையன்று கடற்கரையை விட்டு வெளியேற மறுத்து கடல் தண்ணீருக்கு அருகில் சென்றவர்கள் பலரும் உணவின்றி தவித்தனர். அவர்களுக்கு படகு மூலம் உணவு கொண்டு வந்து கொடுத்து மீனவர்கள் உதவினர். இதன்காரணமாகவே மீனவர்கள் மீது போலீசின் கோபம் திரும்பியுள்ளது. இதனையடுத்தே மீனவர் குடியிருப்பு பகுதிக்குள் தேடி தேடி அப்பாவிகளை கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.