சென்னை கலவரம்: தீ வைப்பு-பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக 170 பேர் கைது
சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்ற கலவரத்தில் தீவைப்பு, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தாக 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: அமைதிப்பூங்காவான சென்னையில் திங்கட்கிழமையன்று 51 இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. 200 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் பெரிய அளவில் நடந்தன.
ஐஸ்அவுஸ் காவல்நிலையம் பெட்ரோல் குண்டுவீசி தீ வைத்து கொளுத்தப்பட்டது. மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே போலீஸ் பூத் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பத்தில் நடந்த கலவரத்தில் மீன் மார்க்கெட், குடிசைகள் தீ வைத்து நாசப்படுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி பாரதி சாலையிலும் கார் ஒன்று எரிக்கப்பட்டது. அரும்பாக்கம், வடபழனி மற்றும் எம்.கே.பி.நகர், வியாசர்பாடி பகுதியிலும் போலீஸ் வாகனங்களும், தீயணைப்பு துறை வாகனங்களும் எரிக்கப்பட்டன. வன்முறையாளர்களை வீடு வீடாக சென்று தேடி கைது செய்து வருகின்றனர்.
வன்முறை தீவைப்பு
தாசப்பிரகாஷ் பகுதியில் இணைஆணையர் சந்தோஷ் குமாரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரக் காரர்கள் தாக்குதலில் இருந்து தப்பிய அவர் பேருந்தில் ஏறி தப்பிச் சென்றார். அவரது கார் டிரைவர் தலைமைக் காவலத் செந்தில்குமார் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டார்.
வழக்கு பதிவு
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் வன்முறையாளர்கள் மீது 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வடசென்னையில் 7 வழக்குகள் பதிவானது. வடசென்னையில் பதிவான 7 வழக்குகள் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தென்சென்னை பகுதியில் நடந்த கலவரம், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சுமார் 130 பேர் கைது ஆனதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
170 பேர் கைது
திங்கட்கிழமை நடைபெற்ற தீவைப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இணை ஆணையர் சந்தோஷ்குமாரின் காரை எரித்த வழக்கில் எழும்பூர் போலீசார் ஒரு அமைப்பைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே போலீஸ் பூத் எரிக்கப்பட்ட வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்நிலையம் தீவைப்பு வழக்கு
ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் 8 பேரும், நடுக்குப்பத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சினிமா புதுமுக இயக்குனர் ஒருவர் உள்பட 30 பேரும் கைதானதாக தெரிவிக்கப்பட்டது. வடபழனியில் நடந்த கலவரம் தொடர்பாக 8 பேர் கைதானார்கள். வேளச்சேரியில் வன்முறையில் ஈடுபட்டதாக 11 பேர் பிடிபட்டனர்.
பேருந்து கண்ணாடிகள் உடைப்பு
வேப்பேரி உள்ளிட்ட 4 இடங்களில் டாஸ்மாக் கடைகள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அந்த சம்பவங்களில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
102பஸ்கள் உடைக்கப்பட்டன. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்யும் பணி நடந்து வருகிறது.
கண்காணிப்பு கேமரா
பல்வேறு சம்பவங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது வேட்டை தொடர்வதாகவும் போலீசார் கூறினார்கள். இதனையடுத்து சென்னையில் வீடு வீடாக தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.