ராஜஸ்தானில் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை இணை கமிஷனர் ஆய்வு
ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை இணை கமிஷனர் ஆய்வு செய்து உள்ளார்.
ஜோத்பூர்: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சந்தோஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் உள்ள கொளத்தூர் நகைக்கடை ஒன்றில் கடந்த மாதம் 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பிடிக்க சென்னையச் சேர்ந்த தனிப்படை ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் விசாரணை நடத்தியது.
அதில் கொள்ளையர்கள் பதுங்கி இருக்கும் பகுதியை நெருங்கியபோது, போலீஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரிய பாண்டியனின் உடல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இன்னொரு ஆய்வாளரான முனிசேகரனும் கடுமையான காயம் அடைந்ததால் அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ் குமார் மற்றும் தனிப்படை போலீஸார் சிலர் நேற்று காலை விமானம் மூலம் ராஜஸ்தான் கிளம்பிச் சென்றார். நேற்று ராஜஸ்தான் மாநில காவல்துறையினருடன் கொள்ளையர்களை பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இன்று மாலை இணை ஆணையர் சந்தோஷ் குமார் ஆய்வு நடத்தி உள்ளார். இந்நிலையில், பெரியபாண்டியனை சுட்ட கொள்ளை கூட்ட தலைவன் நாதுராமின் வலதுகரமாக செயல்பட்ட அவரது கூட்டாளி தினேஷ் செளத்ரி தற்போது ராஜஸ்தானில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.