சென்னை நகருக்கு படிப்படியாக பவர் வரும்.. புறநகர்களுக்கு 3 நாட்களாகும்
சென்னை: சென்னை நகருக்கு படிப்படியாக மின்வினியோகம் சீராகும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பங்களை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று கூறுகையில்,
சென்னை நகரின் அனைத்து இடங்களிலும் படிப்படியாக மின்வினியோகம் சீராகும். வர்தா புயலால் 15 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின்வினியோகம் சீராக 3 நாட்களாகும்.
சென்னை புறநகர் பகுதிகளில் மின்வினியோகம் சீராக 3 நாட்கள் ஆகும் என்றார். அடையாறு, மந்தவெளி, வளசரவாக்கம், போரூர், சாந்தோம், அண்ணாநகர், ராயபுரம், கோயம்பேடு, டைடல் பார்க், கிண்டி, திருவான்மியூர், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சில பகுதிகளில் மின்வினியோகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை நகருக்கு நேற்று இரவுக்குள் மின்வினியோகம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.