வாழும் இதயங்கள் - மூளைச் சாவடைந்த சென்னை பெண்ணின் இதயம் தானம்
சென்னை: சென்னையில் மூளைச்சாவடைந்த பெண் ஒருவரின் இதயம் தானமாக அளிக்கப்பட்டது.
சென்னை பாடியை சேர்ந்தவர் ஷீபா என்ற திருமணமான பெண்மணி.
பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஷிப்பிங் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இரு சக்கர வாகனம் மோதல்:
ஷீபா நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அசோக் பில்லரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதில் ஷீபா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உயிருக்கு போராடிய ஷீபா:
இதனால் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிய அவரை அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராமாபுரம் மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மூளைச்சாவு நிலை:
கோமா நிலையில் இருந்த ஷீபாவுக்கு நேற்று மாலையில் மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஷீபாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
உடல் உறுப்புகள் தானம்:
உடனடியாக முகப்பேர் மருத்துவமனை மற்றும் மியாட் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஷீபாவின் உடல் உறுப்புகளை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதயமும் தானம்:
இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை பிரித்து எடுத்தனர். நள்ளிரவு 12 மணியளவில் இதயத்தை கொண்டு செல்ல தயாரானார்கள்.
முகப்பேரில் அறுவைசிகிச்சை:
போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டு முகப்பேர் வந்தடைந்து உடனடியாக தயாராக இருந்த மருத்துவ குழுவினர் அந்த இதயத்தை இன்னொரு நோயாளிக்கு பொருத்தினார்கள்.
சிறுநீரகங்களும் தானம்:
ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
6 பேரின் புது வாழ்வு:
இரண்டு கண்களும் சங்கரநேத்ராலயா கண் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது.பலியான ஷீபாவின் உடல் உறுப்புகள் மூலம் 6 பேர் புதுவாழ்வு பெற்றுள்ளார்கள்.