வெள்ளத்தில் தத்தளித்த விலங்குகள்... களமிறங்கி காப்பாற்றிய சென்னை இளைஞர்கள்!
கேரள வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை இளைஞர்கள் மீட்டு கொண்டுவந்துள்ளனர்.
சென்னை: உயிர்களில் உயர்ந்ததும், தாழ்ந்ததும் ஏது? சிறியதும் பெரியதும் ஏது? பூமிப்பந்தின் மேல் படைக்கப்பட்ட எல்லாமே உயிரூட்டமுள்ள ஜீவன்கள்தான்!
இயற்கை அன்னையின் கடுங் கோபத்திற்கு ஆளான கேரளாவில் மனித உயிர்கள் மட்டும் அல்ல, ஏராளமான விலங்கினங்களும் ஏராளமாக மடிந்து விழுந்தன. பல விலங்குகள் வெள்ளத்தில் தத்தளித்து மிதந்தன... சொல்ல வழி தெரியாமல் விழித்தன... எங்களையும் காப்பாற்றுங்கள் என்று கூப்பாடு போட முடியாமல் தவித்தன.. எந்நேரமும் தண்ணிக்குள்ளேயே கிடந்து... உடம்பெல்லாம் விறைத்துகொண்டு சாப்பிட வழியின்றி, உணவு வழங்கவும் ஆளின்றி உயிரை கையில் பிடித்து கொண்டு நடுங்கின... இதில், ஆடுகள், கோழிகள், மாடுகள், நாய்கள் என பல அடங்கும்!
இளைஞர்கள் குழு
மனிதர்களையே காப்பாற்ற திணறி வரும்போது விலங்குகளை பற்றி யார் நினைப்பார்கள் என்று பார்த்தால், அந்த விலங்குகளையும் காப்பாற்ற ஒரு க்ரூப் கிளம்பிவிட்டது. நம்ம ஊரிலிருந்துதான்... அதுவும் சென்னையிலிருந்து. 4 பேர் கொண்ட "குட்டி குழு" இது. இளைஞர்களுக்கு எங்கு வெள்ளம், பேரிடர் ஏற்பட்டாலும் அங்கு சென்று விலங்குகளை காப்பாற்றுவதுதான் முதல் வேலையாம்.
கழுத்தளவு நீரில் உதவி
இத்தனைக்கும் இவர்கள் எல்லோருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள். இருந்தாலும் உயிர்களை காப்பாற்ற இந்த இளைஞர்கள் அதிகமாக முயற்சி எடுத்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன் இதுகுறித்து விரிவாகவே தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், இதற்கென ஒரு வாட்ஸ் அப் க்ரூப் மற்றும் ஹெல்ப்லைன் நம்பரை வைத்து கொண்டு செயல்பட்டு வருகிறார்களாம். இப்போது இவர்களின் அடுத்த களம் கேரளாதான். இங்கு கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு விலங்குகளை காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது. இப்படித்தான் திருச்சூரில் விலங்குகளை மீட்கும் பணி நடைபெற்றது.
வெளியே வர மறுத்த சுனிதா
அப்போது சுனிதா என்ற பெண் 25-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்துவருகிறார். எல்லாமே நீரில் சிக்கி கொண்டன. ``நாய்களை வெளியேற்ற முடியாது'' என்று தன்னார்வு அமைப்பினர் தெரிவித்தனர். ஆனால் சுனிதாவோ, ``நாய்கள் இல்லாமல் நான் வரவேமாட்டேன்" என்று கூறி அவரும் வெளியே வர மறுத்துவிட்டார். பிறகு ஒருவழியாக இந்த விலங்குகள் நல அமைப்பினர்தான் கஷ்டப்பட்டு, தத்தளித்த எல்லா நாய்களையும் வெளியே கொண்டு வந்தனர். பின்னர்தான் சுனிதா வெளியே வந்துள்ளார்.
மக்களை காப்பாற்றிய நாய்
பூமிக்கடியில் எந்த மாற்றம் ஏற்பட போகிறது என்றாலும் அதனை விலங்குகளால் முன்கூட்டியே அறிந்திட முடியும். இப்படித்தான் ஒருமுறை இடுக்கி மாவட்டத்தில், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே, நாய் ஒன்று தொடர்ந்து சத்தமாக குறைத்துள்ளது. நாய் குறைப்பதை வைத்துதான் நிலச்சரிவை அப்பகுதி மக்கள் அறிந்து பேரழிவிலிருந்து தப்பி இருக்கிறார்கள். மக்களை எச்சரித்து காப்பாற்றிய அந்த நாய், தற்போது வெள்ளத்தில் மாட்டிக் கொண்டது. ஆனால் அப்பகுதி மக்கள் விடவில்லையே... தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த நாயை மீட்டு வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த விவரங்களையெல்லாம் ஷ்ரவன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீடிக்கும் ஜீவகாருண்யம்
எப்படியோ, மனிதர்களை நோக்கி மட்டுமல்ல... விலங்குகளை நோக்கியும் ஆதரவு கரம் நீண்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகவே உள்ளது. ஜீவகாருண்யம் இன்னும் சாகவில்லை என்பதன் இன்னொரு அடையாளம்தான் இந்த இளைஞர்களின் முயற்சி!