சுவாதி கொலை வழக்கு: ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக திலீபன் மகேந்திரன் கைது
சென்னை: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக திலீபன் மகேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கி வரும் திலீபன் மகேந்திரன், பேய்கள் இல்லை என்பதற்காக நள்ளிரவில் சுடுகாட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் படங்களைப் போட்டிருந்தார். பின்னர் நாட்டின் தேசியக் கொடியை எரித்தபடியான புகைப்படங்களைப் பதிவு செய்திருந்தார்.
இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார் திலீபன் மகேந்திரன். இந்த நிலையில் சுவாதி கொலை செய்யப்பட்ட நாள் முதலே தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பல தகவல்களை பகிர்ந்து வந்தார்.
இதில் பலரது பெயரையும் குறிப்பிட்டு இவர்களெல்லாம் சுவாதி கொலைக்குக் காரணம் எனவும் அதில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசில் அவதூறு பரப்புவதாக புகார் கொடுக்கப்பட தற்போது திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.