கைவிட்ட காதலி… போலீஸ் நிலையம் முன் தூக்கில் தொங்கிய சென்னை வாலிபர்
சென்னை: காதலித்த பெண் தன்னை விட்டு விட்டு பெற்றோருடன் சென்றதால் விரக்தியடைந்த வாலிபர் ஒருவர் யானைக்கவுனி போலீஸ் நிலையத்திற்கு எதிரிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் யாகூப்,32. இவர் சென்னை சௌகார்பேட்டை பெருமாள் கோயில் தோட்டம் 11ஆவது தெருவில் வசிக்கும் மைத்துனர் ஷேக்தாவூத் வீட்டில் வசித்து வந்தார். மேலும் ஷேக்தாவூத் சௌகார்பேட்டை அண்ணா தெருவில் வைத்திருக்கும் செல்போன் கடையில் யாகூப் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் யாகூப்பும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை, யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் இருவரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையே இருவரையும் போலீஸார் திருப்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர். யானைக்கவுனி காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், யாகூப் காதலித்த பெண் தனது பெற்றோருடன் செல்வதாகக் கூறி, அவர்களுடன் சென்று விட்டார். இதைக் கேட்டு யாகூப் அதிர்ச்சியடைந்தார். அதேநேரத்தில் யாகூப் குடும்பத்தினரும், உறவினர்களும், கடுமையாக அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த யாகூப் சோகத்துடனேயே, காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் மாலையில் அந்தக் காவல் நிலையம், அருகே உள்ள மாநகராட்சி மைதானத்துக்குச் சென்ற யாகூப், அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த யானைக்கவுனி போலீஸார், யாகூப் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலித்த பெண் கைவிட்டு சென்றதால் இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.