மோடி ஒரு பக்கம், வர்தா மறுபக்கம்: சென்னைவாசிகள் நிலைமை இப்படி ஆகிடுச்சே
சென்னை: தொலைத்தொடர்பு சாதனங்களில் சிக்னல் பிரச்சனையால் சென்னை மக்கள் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.
கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் மக்கள் செலவுக்கு கையில் பணம் இல்லாமல் அல்லாடி வருகிறார்கள். வங்கிகளுக்கு சென்றாலும் சரி, ஏடிஎம்களுக்கு சென்றாலும் சரி போதிய பணமும் இல்லை வரிசையில் கிலோமீட்டர் கணக்கில் ஆட்கள் நிற்கிறார்கள்.
இதனால் பெரும்பாலானவர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.
சென்னை
சென்னையில் வர்தா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் தொலைத்தொடர்பு சாதனங்களில் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் செல்போன்களில் சிக்னல் சுத்தமாக இல்லை.
டெபிட் கார்டு
அன்றாட தேவைக்கான பொருட்கள், பெட்ரோல், டீசல் வாங்க சென்னைவாசிகளில் பலர் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை நம்பியுள்ளனர். இந்நிலையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் மட்டும் அல்ல கார்டுகளை ஸ்வைப் செய்யும் மிஷின்களுக்கும் சிக்னல் இல்லை.
அவதி
பெட்ரோல், டீசல் போடச் சென்றவர்களிடம் கார்டுகளை பயன்படுத்த முடியாது ரொக்கமாக கொடுங்கள் என பங்க் ஊழியர்கள் இன்று தெரிவித்தனர். பணத்திற்கு நாங்கள் எங்கு போவது என பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
கடவுளே
ஏடிஎம்களிலும் பணம் இல்லை, கார்டுகளையும் பயன்படுத்த முடியவில்லை, வங்கியில் பணம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோமே என சென்னை மக்கள் நொந்து கொள்கிறார்கள்.