மின் கட்டணம்... அபராதம் இல்லாமல் 15ம் தேதி வரை செலுத்தலாம்!
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் வருகின்ற 15ம் தேதி வரை மின் கட்டணம் அபராதம் இல்லாமல் செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை மின்வாரியம் வருகின்ற 15ம் தேதி வரை நீட்டித்து உள்ளது. மேலும், மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி கடந்து விட்டவர்கள் எந்தவித அபராதமும் இன்றி வருகின்ற 15ம் தேதி வரை எந்த தேதிக்குள்ளும் கட்டிக்கொள்ளலாம்.
இந்த அறிவிப்பு சென்னை வடக்கு, தெற்கு, மேற்கு, சென்னை மத்தி மின் பகிர்மான வட்டங்கள், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டம், கடலூர் மின் பகிர்மான வட்டம் ஆகிய பகுதிக்கு மட்டும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.