கிறிஸ்மஸ் கொண்டாட ரெடியாகி வரும் சென்னை.. கேக்.. ஸ்டார்.. விற்பனை படுஜோர்
கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட கேக், ஸ்டார் மற்றும் அலங்கார தோரணங்கள் ஜோராக விற்பனையாகி வருகின்றன.
சென்னை: இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், கிறிஸ்மஸ் கொண்டாட சென்னை நகரம் தயாராகி வருகிறது. கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் ஸ்டார், தோரணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் கேக் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
கருணையின் உருவாகவும், சேவையின் தந்தையாகவும் கிறிஸ்தவ மக்களால் பணிந்து தொழப்படும் ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ம் அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஐரோப்பிய வீதிகளிலும், வீடுகளிலும், கடைத் தெருக்களிலும் பண்டிகையின் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதற்கு சற்றும் குறையாத வகையில் தமிழ் நாட்டிலும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்டார்
குழந்தை ஏசுவை வரவேற்கும் வகையிலும், கிறிஸ்மஸ் பண்டிகையின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் கிறிஸ்மஸ் ஸ்டார் கட்டி தொங்க விடப்படும். இது புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவ வீட்டு வாசலிலும் ஒளிர்ந்து அழகாக காட்சியளிக்கும். இந்த ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரும் வாங்கிச் செல்கின்றனர். பணப்பிரச்சனைகள் இருந்தாலும் இந்த ஆண்டு ஸ்டார் விற்பனை நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள் விற்பனையாளர்கள்.
வண்ண வண்ணத் தோரணங்கள்
கிறிஸ்மஸ் பண்டிகை நேரத்தில் கிறிஸ்தவர்கள் வீட்டை அலங்காரம் செய்வதே ஒரு கலையாக இருக்கும். சின்ன வீடாக இருந்தாலும் அதனை அவ்வளவு அழகாக வண்ணத் தோரணங்களால் அலங்காரம் செய்து அசத்துவார்கள். குடில் அமைத்து, கிறிஸ்மஸ் மரம் வைத்து, அதில், குட்டி குட்டி மணி, சின்னச் சின்ன விளங்குகள் பொருத்தி அழகு செய்வார்கள். இந்த ஆண்டு புதிய வடிவத்திலான பல வண்ண மயமான அலங்காரப் பொருட்களும், தோரணங்கள் சந்தைக்கு வந்துள்ளன.
பரிசுப் பொருட்கள்
கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்று பரிசுப் பொருட்களை நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகளுக்கு கொடுப்பது. அப்படி விதவிதமான பரிசுப் பொருட்களைத் தேடிச் சென்று வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர். குறிப்பாக ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவென்யு போன்ற ஷாப்பிங் மால்களில் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
விதவிதமான கேக்
கிறிஸ்மஸ் என்றால் கேக் இல்லாமலா? சாதாரண பேக்கரி முதல் பெரிய பேக்கரி வரை விதவிதமான வகை வகையான கேக்குகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளன. பிளாக் ஃபாரஸ்ட், பட்டர் ஸ்காட்ச், ஸ்ராபேர்ரி உள்ளிட்ட சுவைகளில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ 400 ரூபாய் இருந்து விற்கப்படுகிறது.
தேவாலயங்களில் கிறிஸ்மஸ் மரம்
சின்ன சர்ச்சுக்கள் முதல் சாந்தோம் சர்ச் போன்ற பெரிய தேவாலயங்கள் வரை அனைத்திலும் கிறிஸ்மஸ் மரங்கள் வைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு சென்னை மக்கள் கடும் துயரத்தில் இருந்ததால் கிறிஸ்மஸ் பண்டிகை கொஞ்சம் டல்லாக கடந்து போனது. எனவே, கடந்த ஆண்டு அனைத்து தேவாலயங்களிலும் அமைதியான முறையிலேயே கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு பண மதிப்பு நீக்கப் பிரச்சனையால் மக்களிடம் பணம் இல்லை என்றாலும், அவர்களுடைய பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.