தோல்வியில் இருந்து தப்பி பிழைத்த சூப்பர் மச்சான்ஸ்
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து சாம்பியன் போட்டியின் அரை இறுதிக்கு நுழையும் வாய்ப்பை உறுதி செய்யும் மிக முக்கியமான ஆட்டத்தில் கடைசி நேர கோலால் தோல்வியில் இருந்து சென்னையின் எப்சி தப்பியது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அரை இறுதி சுற்றுக்கு அறிமுக அணியான பெங்களூரு எப்சி ஏற்கனவே முன்னேறியுள்ளது.
அரை இறுதிக்கு நுழைய உள்ள மற்ற மூன்று அணிகள் எவை என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அதனால், தற்போது நடந்து வரும் கடைசி கட்ட ஆட்டங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானதாகும்.
புள்ளிப் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள சென்னையின் எப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் நேற்று இரவு சென்னையில் நடந்த ஆட்டத்தில் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதி ஜாம்ஷெட்பூர் எப்சியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. பந்தைக் கடத்தி செல்வது, தடுப்பாட்டம் என, மிரட்டினர். 32வது நிமிடத்தில் வெலிங்டன் பிரையாரி கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
அதன் பிறகு, ரஜினியும் கமலும் மாறி மாறி அரசியலில் நுழைவதற்கான போட்டி போடுவது போல ஆட்டம் மாறியது. இரண்டாவது பாதியில், நாங்கள் முன்னாள் சாம்பியன்டா என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னையின் எப்சி விளையாடத் துவங்கியது.
கடைசியாக, 88வது நிமிடத்தில் முகம்மது ரபி கோலடிக்க, சமநிலை உருவானது. அதன் பிறகு போட்டி கடுமையாக இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒரு கட்டத்தில் தோல்வியடைந்து விடும் என்ற நிலையில் இருந்து டிரா செய்து அசத்தியது சென்னையின் எப்சி.
இதன் மூலம், மிகவும் முக்கியமான ஒரு புள்ளி கிடைத்தது. தற்போது பெங்களூரு அணி 16 போட்டிகளில் 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. புனே சிட்டி 16 போட்டிகளில் 29 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையின் எப்சி 29 புள்ளிகளுடனும், ஜாம்ஷெட்பூர் 26 புள்ளிகளுடனும் உள்ளன.
சென்னையின் எப்சி அடுத்ததாக கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் 23ம் தேதியும், மும்பை சிட்டியுடன் மார்ச் 3ம் தேதியும் மோதுகிறது.