நெஞ்சு வலி இல்லை எரிச்சலாம்: விஜயகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக உள்ளார். இதனால் படப்பிடிபப்பு நடக்கும் இடங்களுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் கண்ணில் உருத்தல் இருந்து கொண்டே இருந்ததால் அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஊர் திரும்பிய அவர் வழக்கம் போல் படப்பிடிப்பு மற்றும் கட்சி பணிகளை கவனித்து வந்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்திற்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் அவர் நெஞ்சுவலிக்காக அல்ல நெஞ்சு எரிச்சலுக்காக இன்று காலை 7 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இது வழக்கமான பரிசோதனை தான் என்றும், அவர் இன்று மாலைக்குள் வீடு திரும்பிவிடுவார் என்றும் தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.