சென்னை மதுக்கடை சூறை: 6 மாணவிகள் உட்பட 15 பேர் புழல் சிறையில் அடைப்பு
சென்னை: சென்னையில் நேற்று டாஸ்மாக் கடை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவிகள் உட்பட15 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை உட்பட பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடித்து உடைக்கப் பட்டன. சென்னையில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இணைந்து மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடித்து நொறுக்கிய மாணவர்கள்
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாரிங்டன் சாலை செனாய் நகரில் இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். சிலர், கடை மீது கற்களை வீசி தாக்கினர். மதுபாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
போலீஸ் தடியடி
அப்போது மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸார் கடுமையாக தாக்கியதில் மாணவர்கள் பலர் பலத்த காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
சாலைமறியல்
போலீஸாரின் பிடியில் இருந்து மாணவர்களை மீட்க போராடிய 6 மாணவிகள் ‘புத்தகத்தை படிக்கவா? சாராயத்தை குடிக்கவா?' என்று முழக்கமிட்டனர். போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மாணவிகள், காவல் துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் போலீஸார் தடியடி நடத்தினர்.
மாணவிகள் மயக்கம்
போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து முழக்கமிட்டுக் கொண்டிருந்த மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். அவரையும் பலவந்த மாக இழுத்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக 15 பேர் மீது பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தது,போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை
கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி வசந்தகுமார் முன்பு அஜர்படுத்தப்பட்டனர். கைது நடவடிக்கைக்கு பிறகும் போலீசார் தாக்குதல் நடத்தியிருப்பதாக 15 பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதனை ஏற்று 15 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
புழல் சிறையில் அடைப்பு
பெரவலூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து மீண்டும் அவர்கள் நீதிபதி முன் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 15 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.